காயம் என்ற ஒரு விஷயம் காரணமாக டி20 உலகக்
கோப்பை 2021, 2022 தொடர்களை நாம் இழந்தோம். அப்போது, முக்கிய பௌலர் பும்ரா,
முக்கிய ஆல்-ரவுண்டர் ஜடேஜா போன்றவர்கள் காயம் காரணமாக அவதிபட்டதால்தான் இந்த
பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், அதன்பிறகு அனைவரும் குணமடைந்ததால், ஆசியக்
கோப்பை 2023 தொடரில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை இந்தியா வென்றது.
இந்நிலையில், உலகக் கோப்பை 2023 தொடரிலும் ஒரு
பெரிய சோக செய்தி வெளியாகியிருக்கிறது. நேற்று நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான
லீக் ஆட்டத்தில் விளையாடிய ஹார்திக் பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
சிறிய காயம் என்பதால், பிரச்சினை இருக்காது எனக் கருதப்பட்டது.
ஹார்திக் பாண்டியா காயம்:

ஆட்டத்தின் 9ஆவது ஓவரை வீசிய ஹார்திக் பாண்டியா,
தனது 2 மற்றும் 3ஆவது பந்தில் பவுண்டரியை விட்டுக்கொடுத்தார். அப்போது, இரண்டாவது
பவுண்டரியை தடுக்க காலை பயன்படுத்தி பார்த்தார். அப்போது, கால் தவறி கீழே விழுந்த
அவருக்கு, இடது காலில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பந்துபோட ஆயத்தமானார்.
இருப்பினும், சரியாக ஓட முடியாத காரணத்தினால் பெவிலியன் திரும்பினார். அந்த
ஓவரில் எஞ்சிய மூன்று பந்துகளையும் கோலிதான் வீசினார்.
ஹார்திக் பாண்டியா விளையாட மாட்டார்:

ஹார்திக் அணியின் மிகமுக்கிய வீரர் என்பதால்,
லேசான காயமும் பெரிய பயத்தை ஏற்படுத்தியது. இதனால், உடனே மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,
மீண்டும் மைதானத்திற்கு வந்தார். அவருக்கு தற்போதுவரை லேசான வலி மட்டுமே
இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ரா காயம் காரணமாக அவதிப்பட்டபோது,
இப்படிதான் லேசான வலி இருந்தது. அதோடு அவர் விளையாடியதால், அடுத்த 6 மாதங்கள் வரை
அவரால் விளையாட முடியாமல் போனது. ஆகையால், ஹார்திக் பாண்டியாவுக்கு வலி
முழுவதுமாக குறையும் வரை, அவரை விளையாட வைக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு
எடுத்துள்ளது.
ஹார்திக் பாண்டியா மாற்று யார்?

இதனால், வரும் ஞாயிறு அன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில்
ஹார்திக் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக
சூர்யகுமார் யாதவ் அல்லது முகமது ஷமி இருவரில் ஒருவரை சேர்க்க வாய்ப்புள்ளது.
பேட்டிங் பிட்ச் என்றால் முகமது ஷமியையும், பௌலிங் பிட்ச் என்றால் சூர்யகுமார்
யாதவையும் களமிறக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஹார்திக் பாண்டியா இல்லையென்றாலும்
பும்ரா, சிராஜ், ஷர்தூல், ஜடேஜா, குல்தீப் ஆகிய முக்கிய பௌலர்கள் அணியில்
இருக்கிறார்கள். இதனால், இந்திய அணிக்கு பெரிய பிரச்சினை இருக்காது எனக்
கருதப்படுகிறது.
0 Comments