கிரிக்கெட்ல கூடவா அரசியல் பண்ணுவாங்க இவங்க!! பிசிசிஐ கடும் கண்டனம்

கிரிக்கெட்ல கூடவா அரசியல் பண்ணுவாங்க இவங்க!! பிசிசிஐ கடும் கண்டனம்
இந்தியாவில், 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையும், 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையும் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணி கட்டாயம் இந்தியா வரவேண்டிய சூழல் உள்ளது. இந்தியா வரும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் உரியப் பாதுகாப்பு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தந்தால் மட்டுமே போட்டிகளில் பங்கேற்போம் எனத் திட்டவட்டமாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக இயக்குநர் வாசிம் கான் தெரிவித்திருந்தார்.

மாறிமாறி உத்தரவாதம் கேட்கும் இந்தியா - பாகிஸ்தான்

இதற்கு பிசிசிஐ சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்துப் பேசிய பிசிசிஐயின் முக்கிய நிர்வாகி ஒருவர், “விளையாட்டுப் போட்டிகளில் அரசியலைத் திணிப்பது ஏற்புடையது அல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்கும் உத்தரவாதத்தைக் கொடுக்க நாங்கள் தயார். அதேபோல், பாகிஸ்தானும் எங்களுக்கு உத்தரவாதம் தரவேண்டும். இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அணி வீரர்கள் வரும்போது, எல்லையில் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க முயற்சிக்க கூடாது. புல்வாமா போன்ற தாக்குதலை நடத்த உடந்தையாக இருக்கக் கூடாது. எல்லையில் எவ்வித துப்பாக்கிச் சண்டையும் நடத்தக் கூடாது. இதற்கு எழுத்துப் பூர்வ உத்தரவாதம் தரும் பட்சத்தில் நாங்கள் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிக்கு மட்டும் உத்தரவாதம் கேட்பது ஏன்?

“கிரிக்கெட்டைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் உத்தரவாதம் கேட்காமல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு மட்டும் கோரிக்கை விடுப்பது, உத்தரவாதம் கேட்பது எதற்காக? இருநாடுகளுக்கு இடையில் மட்டும் போட்டி நடைபெற்றால் பாகிஸ்தான் வைத்திருக்கும் கோரிக்கை ஒருவேளை நியாயமானதாகக் கூட இருந்திருக்கலாம். இது ஐசிசியால் நடத்தப்படும் உலகக் கோப்பைத் தொடர். இந்தியா வரும் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களுக்குத் தங்குதடையின்றி விசா வழங்கப்படும் எனக் கடந்த 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மட்டுமல்ல, அனைத்து நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது பிசிசிஐயின் கடமை. ஆகையால், யாரும் பயப்படத் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை போட்டிகள் முறையே 2021 மற்றும் 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாகிஸ்தான் அணி போட்டியைப் புறக்கணிக்கும் பட்சத்தில் பிசிசிஐக்கு இது மிகப்பெரிய தலைவலியாக உருவெடுக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments